ஞாயிறு, 3 ஏப்ரல், 2011

நிலைக்காது நிலையற்ற இன்பம்!


பாம்பாட்டிச் சித்தர்:

புற வாழ்க்கை தரும் சுகங்கள் யாவும் நிலையற்றவை என்றும், அத்தகைய இன்பங்கள் நம்மை மீண்டும் இந்த பூமியில் பிறந்து உழல வைக்கும், எனவே நிலையற்ற இன்பங்களை எதுவென புரிந்து அவற்றை ஒதுக்கி பிறவா பேரின்ப நிலையினை பெற முயற்சிக்க வேண்டும் என்பதை அநேகமாய் எல்லா சித்தர்களும் தங்கள் சீடர்களுக்கு அருளிச் சென்றிருக்கின்றனர். அந்த வகையில் பாம்பாட்டி சித்தர் அருளிய பாடலொன்றினை இன்று பார்ப்போம்.

"மணக்கோலம் கண்டுமிக மன மகிழ்ந்து
மக்கள்மனை சுற்றத்தோடு மயங்கி நின்றாய்
பிணக்கோலம் கண்டுபின்னும் துறவா விட்டால்
பிறப்புக்கே துணையாம் என்று ஆடாய் பாம்பே!"

- பாம்பாட்டிச்சித்தர் -

இரு மனம் இணையும் திருமணம் என்பது எப்போதுமே கொண்டாட்டமான ஒரு துவக்கம்தான், ஆனால் அந்த கொண்டாட்டத்தின் தொடர் விளைவுகள் இன்பமயமாகவே இருக்கிற்தா?. பிள்ளைகளைப் பெற்று அவர்களை வளர்த்து ஆளாக்கி திருமணம் செய்வித்து பேரன், பெயர்த்திகளைப் பார்த்து வீடு கட்டி, வாகனம் வாங்கி தோட்டம் துரவுகளின் மூலம் செல்வம் சேர்த்து மகிழ்ச்சியாக இருக்கிறேன், வேறென்ன வேண்டும் எனச் சொல்லும் மனிதர்களே!

இறந்து போனவனின் பிணத்தைக் கண்டு, நாமும் ஒரு நாள் இது போலாவோம் என்பதை உணர்ந்து, நிலையற்ற இந்த இன்பங்களை துறந்து பேரின்ப பெருவாழ்வினை தேடாடதவர்கள் மீண்டும் மீண்டும் இந்த பூமியில் பிறந்து உழல்வதற்கான அமைப்பை ஏற்றுக் கொள்கின்றனர்.

இவர்களின் நிலை இதுதான் என்பதை தெரிந்து தெளிந்து விட்டோமென்று ஆடு பாம்பே என முடிக்கிறார்.